

சென்னை,
சென்னை விழாவில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் குறித்து பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் #ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன!
தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய இந்த உதவி போதுமானதல்ல!
புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.5264.38 கோரி நிதியுதவி கோரப்பட்டிருந்தது. ஆனால், அதில் 5 விழுக்காடு மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும்! என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.