விஜய் பிரதமராக வேண்டும் என்பது தவெகவின் ஆசை; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்-பெ. சண்முகம்

தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு தொடர்ந்து நீடிக்கும்.
பெ. சண்முகம்
Published on

ஈரோடு,

விஜய் பிரதமராக வேண்டும் என்பது தமிழக வெற்றிக் கழகத்தினரின் விருப்பமாகவும், ஆசையாகவும் இருக்கலாம். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

வரும் 2029 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாட்டின் அடுத்த பிரதமராக வேண்டும் என தவெகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெகவினர் ஆதரிக்கவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகத்திடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

தவெகவின் ஆசை

அதற்கு பதிலளித்த அவர், “தவெக கட்சியினர் தங்களுடைய விருப்பத்தையும் ஆசைகளையும் தெரிவித்துள்ளனர். இதனை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் செயல்படும் கட்சிக்கு உடனடியாக பிரதமராகும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை. இந்தியா போன்ற பரந்த நாட்டில், ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படும் கட்சி பிரதமரை உருவாக்கும் எனக் கூறுவது அந்தக் கட்சியின் ஆசையாக இருக்கலாம்” என்றார்.

இடம்பெற மாட்டோம்

மேலும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். “தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாடு தொடர்ந்து நீடிக்கும். எதிர்காலத்திலும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்” என பெ. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com