திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

பண்ருட்டி அருகே திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
Published on

பண்ருட்டி, 

வாலிபர் பிணம்

பண்ருட்டி அடுத்த திருவதிகை சித்தர் கோவில் அருகே அமைந்துள்ள வீட்டுமனைப்பிரிவில் உள்ள ஒரு மரத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், இதுபற்றி பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி, யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

முந்திரி விற்பனை நிறுவன ஊழியர்

விசாரணையில், அவர் புதுப்பேட்டையை அடுத்த தொரப்பாடியை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்ராஜ்(வயது 29) என்பதும், பண்ருட்டியில் உள்ள முந்திரி விற்பனை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் மோகன்ராஜுக்கு வருகிற 26-ந்தேதி திருமணம் நடைபெற இருந்ததும், இதற்காக அவர் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதாக நேற்று காலை வீட்டில் இருந்த பெற்றோரிடம் கூறிச் சென்றவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதற்கிடையே போலீசார், மோகன்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மோகன்ராஜ் காதல் தோல்வி அல்லது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com