

நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகேயுள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி, என்ஜினீயரான இவர் சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும், இத்தாலி நாட்டை சேர்ந்த பிலாவியா ஜீயநெல்லி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்க தொடங்கினர். ஓராண்டு காதல் வானில் சிறகடித்து பறந்த ஜோடி, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
பின்னர் தங்களது காதல் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து சுப்பிரமணிக்கும், பிலாவியா ஜீயநெல்லிக்கும் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தடபுடலாக திருமணம் நடந்தது. இந்து முறைப்படி வேதங்கள் ஓதப்பட்டு, கெட்டி மேளத்துடன் மணமகன் சுப்பிரமணி, மணமகள் பிலாவியா ஜீயநெல்லி கழுத்தில் தாலி கட்டினார்.
கடல் கடந்த காதல் திருமணத்தில் முடிந்ததால், காதலுக்கு சாதி, மதம், மொழி மற்றும் நாடு என்று எந்த பாகுபாடும் கிடையாது என்பது இவர்களது காதல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பட்டுச் சேலை, மருதாணி, செண்டை மேளம் ஆகியவை மிகவும் பிடித்து இருப்பதாக பிலாவியா ஜீயநெல்லி தெரிவித்தார்.