ஜம்பு தீவு பிரகடன நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்

ஜம்பு தீவு பிரகடன நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜம்பு தீவு பிரகடன நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்
Published on

சிவகங்கை

ஜம்பு தீவு பிரகடன நாளை அரசு விழாவாக காண்டாட வேண்டும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுக்கூட்டம்

1801-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலில் சுதந்திரப்போரை தொடங்க மாமன்னர் மருது பாண்டியர்கள் ஜம்பு தீபகற்ப முதல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட முதல் சுதந்திர பிரகடனமாக ஜம்பு தீபகற்ப பிரகடனம் தொடங்கி 222 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சிவகங்கையில் உள்ள ஜம்பு தீவு பிரகடன மக்கள் இயக்கத்தின் சார்பில் மத்திய,மாநில அரசுகள் ஜம்பு தீவு பிரகடனத்தை வரலாற்றை அங்கீகரித்து இதை முதல் சுதந்திர போராட்டமாக அறிவிக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து பொதுமக்கள் சார்பில் பொதுக்கூட்டம் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடந்தது. இதற்கு சிவகங்கை மன்னர் மகேஷ் துரை தலைமை தாங்கினார். ராமநாதபுரம் இளைய மன்னர் பாபு சண்முகநாதன் சேதுபதி, தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த், பகீரத நாச்சியப்பன், நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜம்பு தீவு பிரகடன மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் மூத்த வக்கீல் மோகனசுந்தரம் வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர் குணசேகரன் நோக்க உரையாற்றினார்.

மனு

விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூரசுந்தர பாண்டியன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி. தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் துரை கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, அ.தி.மு.க. நகர செயலாளர் என்.எம்.ராஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்டவர்கள் சார்பில் ஜம்பு தீவு பிரகடன நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் முதல் சுதந்திரப் போராட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற வலியுறுத்தி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மேலும் ஜம்பு தீவு பிரகடனம் பற்றிய புத்தகம் எழுதப்பட்டது. முடிவில் ஜம்பு தீவு பிரகடன மக்கள் இயக்கத்தின் பொருளாளர் யுவராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com