காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர் ஜானகி: மு.க.ஸ்டாலின் இரங்கல்

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்
 காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியவர் ஜானகி:  மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 88 வயதான ஜானகி உடல் நல பாதிப்பால் மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது; இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது.

அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com