ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி முதல் வாரம் அரசிடம் ஒப்படைப்பு - அதிகாரிகள் தகவல்

மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை ஜனவரி முதல் வாரத்தில் அரசிடம் ஒப்படைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி முதல் வாரம் அரசிடம் ஒப்படைப்பு - அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து இரவு, பகலாக ஒப்பந்தக்காரர்களுடன், பொதுப்பணித்துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தது. கொரோனா மற்றும் மழை காரணமாக திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது. இருந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார். இந்தநிலையில் தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது கட்டுமானத்திற்கு உதவிகரமாக இருந்த மரக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம்,அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப்பகுதி முழுவதும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் நினைவிட வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இங்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், மக்களுக்கு செய்த பணிகள் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இந்தப்பணிகள் நிறைவடையும். ஜனவரி முதல் வாரத்தில் நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

இந்தியாவில் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு நினைவிடங்கள் உள்ளன. இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களுடன் நினைவிடம் அமைக்கப்பட்டு, அதில் டிஜிட்டல் முறையில் அவருடைய வாழ்க்கை முறைகள், அவர் செய்த சாதனைகள், தியாகங்கள், மக்களுக்கு செய்த உயர்ந்த சேவைகள், வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், அவர் படித்த நூல்கள் போன்றவை அடங்கிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருப்பது இதுவே முதன் முறையாகும்.

இது சென்னைக்கு மேலும் பெருமையை சேர்க்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நினைவிடத்தை பராமரிக்க அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு திறப்பது குறித்து அரசு முடிவெடுத்து அறிவிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com