ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை

ஆலங்குளம் காட்டுப்பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை மது குடிக்க வைத்து ரூ.4 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை
Published on

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று தொழில் விஷயமாக ஆலங்குளத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்ததும், ஆலங்குளம் ஜோதிநகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று குடித்தார்.

அப்போது அங்கு வந்த 3 மர்நபர்கள் நைசாக விஜயனுடன் பேச்சுக்கொடுத்து அவரை மேலும் மதுகுடிக்க வைத்தனர். பின்னர் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் அரிவாளைக் காட்டி மிரட்டிய மர்மநபர்கள், விஜயன் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகளை பறித்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் பறித்தனர்.

தொடர்ந்து விஜயனின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் 160 கிராம் வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்த மர்மநபர்கள், மோட்டார் சைக்கிள் சாவியுடன் தப்பி சென்றனர். கொள்ளைபோன நகைகள் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும்.

சிறிதுநேரத்தில் போதை தெளிந்ததும் விஜயன் தனது நகைகள், பணம், செல்போன் போன்றவை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே விஜயன் தன்னுடன் சேர்ந்து மது அருந்திய மர்மநபர்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை மதுகுடிக்க வைத்து ரூ.4 லட்சம் நகைகளை மர்மநபர்கள் துணிகரமாக கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com