கள்ளக்குறிச்சி: கிணற்றில் மூழ்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

அதே பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்காலாமோ என்ற சந்தேகத்தின்பேரில் குடும்பத்தினர் இறங்கி பார்த்தனர்.
உயிரிழப்பு
Published on

வாணாபுரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி பூமிகா (வயது 25). இவர்களுக்கு 3 வயதில் லஷ்வின் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை லஷ்வின் தனது வீட்டிற்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் நீண்ட நேரமாகியும் குழந்தை வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விளையாடி கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தையை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்காலாமோ என்ற சந்தேகத்தின்பேரில் குடும்பத்தினர் இறங்கி பார்த்தனர்.

பிரேத பரிசோதனை

அப்போது அங்கு நீரில் மூழ்கிய நிலையில் குழந்தை லஷ்வின் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பகண்டை கூட்டு ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com