

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி தமிழகத்திற்குத் தண்ணீர் தர இயலாது என்று மறுப்பது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். பருவமழை பொய்த்தது என்பது, கூட்டாட்சி ஒத்துழைப்பைப் புறக்கணிப்பதற்கோ அல்லது நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல.
2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பை கர்நாடகாவிற்கு நினைவூட்டுகிறோம். மாநிலங்களுக்கு இடையேயான நதியின் நீர் ஒரு தேசிய சொத்து, எந்தவொரு தனி மாநிலமும் அதன் மீது பிரத்யேக உரிமையைக் கொண்டாட முடியாது(பக்கம் 460). காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் மாதத்திற்கு 9.91 டி.எம்.சி. மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்க தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
வறட்சிக் காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளும் முறையை சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக உறுதிப்படுத்தி உள்ளது(பக்கம் 448). பற்றாக்குறை ஏற்படும் போது, அது ஒட்டுமொத்தப் படுகைக்கும் விகிதாச்சாரப்படியே பிரிக்கப்பட வேண்டும் - கர்நாடகா தன்னிச்சையாக அணைக் கதவுகளை மூட முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.