காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி பேசினார்.
காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
Published on

தஞ்சை,

அதிமுக ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாக கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

"தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம்தான் முதல்வர் விஜய்க்கு முக்கியம், மக்கள் முக்கியமில்லை. நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார், ஆனால் தற்போதைய முதல்வர் அதனை மாற்றுகிறார். நடிகர் என்பதால் நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள். விவசாயிகள் உணவுக்கு வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?

பயிர்க்கடன் தள்ளுபடி

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தவெக அரசு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகள் மீது அரசுக்கு கவலையில்லை. ரீல்ஸ் போடுவதில்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. காவிரி நீரை பெற முயற்சிக்கவில்லை.

5 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படும் நிலையில், 2 லட்சம் ஏக்கரில்தான் பாசனம் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிகப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசு விழிப்போடு செயல்பட்டு, சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடகாவிடன் பெற்றுத்தர வேண்டும். காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்த தர வேண்டும். மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு உடனடியாக கூட்ட வேண்டும்”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com