நில பிரச்சினை தொடர்பான வழக்கில் சேலம் கோர்ட்டில் வாதாடிய கேரள திருநங்கை

திருநங்கைகளுக்கு அரசுகள் கூடுதல் திட்டங்களை வழங்கி வருகின்றன என்று கேரள திருநங்கை பத்மலட்சுமி கூற்றினார்.
நில பிரச்சினை தொடர்பான வழக்கில் சேலம் கோர்ட்டில் வாதாடிய கேரள திருநங்கை
Published on

சேலம்,

சேலத்தை சேர்ந்த ஒருவரது நிலப்பிரச்சினை சம்பந்தமான வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகும்படி ஒரு தரப்பினர் கேரளாவை சேர்ந்த திருநங்கை வக்கீலான பத்மலட்சுமி (வயது 27) என்பவரை அணுகினர். இதையடுத்து அவர் இந்த வழக்கில் வாதாட ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக கேரளாவில் இருந்து அவர் சேலம் வந்தார். பின்னர் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது அனைத்து மாநிலங்களிலும் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது. மேலும் பல பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருநங்கைகளுக்கு அரசுகள் கூடுதல் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன்மூலம் திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனர். நாட்டில் முறையாக உயர்கல்வி பயின்று திருநங்கைகள் பலர் வக்கீலாக பணியாற்றி வருகின்றனர். கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் நான் வாதாடி வருகிறேன். இதைத்தொடர்ந்து சேலம் கோர்ட்டில் நான் வாதாடி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே திருநங்கைகள் தங்களின் குறிக்கோளை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டால் எடுத்த பணிகளில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com