தெருவில் கேட்பாரற்று கிடந்த கியாஸ் சிலிண்டர்

திண்டுக்கல்லில், தெருவில் கேட்பாரற்று கிடந்த கியாஸ் சிலிண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தெருவில் கேட்பாரற்று கிடந்த கியாஸ் சிலிண்டர்
Published on

திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில், ஒரு கோவில் அருகே தெருவோரத்தில் நேற்று காலை ஒரு கியாஸ் சிலிண்டர் கேட்பாரற்று கிடந்தது. கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய வந்தவர் விட்டு சென்று இருக்கலாம் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் நீண்டநேரமாகியும் யாரும் சிலிண்டரை எடுக்கவில்லை. இதனால் நேரம் செல்ல, செல்ல மக்களிடம் கியாஸ் சிலிண்டர் குறித்து பீதி பரவியது. அது சிலிண்டர் குண்டாக இருக்கலாம் என்ற பயத்தில் ஒருசிலர் அருகில் செல்வதை தவிர்த்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கியாஸ் சிலிண்டரை சோதனையிட்டனர். அப்போது அது காலியான கியாஸ் சிலிண்டர் என்பது தெரியவந்தது. அதன்பின்னரே போலீசார் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அதிகாலை நேரத்தில் யார் வீட்டிலோ புகுந்து மர்ம நபர் கியாஸ் சிலிண்டரை திருடி இருக்கிறார். பின்னர் சிலிண்டரை எடுத்து செல்லும் போது மக்கள் வருவதை பார்த்து தெருவில் விட்டு சென்று இருக்கலாம். எனவே அது தொடர்பாக விசாரித்து வருகிறோம், என்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com