சிறுமியிடம் சில்மிஷம்....! தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை உறவினர்கள் வெறிச்செயல்

சிறுமியிடம் சில்மிஷம்....! தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை உறவினர்கள் வெறிச்செயல்

கொடூரக் கொலை நடந்தபோது அங்கிருந்த சிலர் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Published on

தென்காசி

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால் (வயது 50). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார்.

கோபால், தான் வசித்து வந்த பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அந்தச் சிறுமியின் உறவினர்கள், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கோபாலை அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான ஒரு ஆணும் அவருடன் வந்திருந்த பெண்ணும் சேர்ந்து கோபாலை சரமாரியாகத் தாக்கினார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவுக்காரப் பெண் கம்பால் தாக்கிய நிலையில், அவருடன் வந்திருந்த ஆண், கோபாலை கீழே தள்ளி அவரின் தலையில் கல்லால் தாக்கினார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை தொடர்ந்து தாக்கினர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கொடூர தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபாலை கொலை செய்த புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த மாரிப்பாண்டி (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் இருந்த உறவினரான வேல்தாய் என்பவரையும் கைது செய்தனர். கொடூரக் கொலை நடந்தபோது அங்கிருந்த சிலர் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com