குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம்

குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம்
Published on

ஆடி பெருந்திருவிழா

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கோவிலில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் கோவில் விளங்குகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது தோஷங்கள் நீங்க நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆடி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி கோவில் முன்பு ஊன்றப்பட்ட கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் நீல வர்ண கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

பக்தர்கள் வழிபாடு

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பரிகாரம் செய்யும் பக்தர்கள் கோவில் அருகில் உள்ள சுரபி நதியில் புனிதநீராடினர். அதன்பிறகு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ததுடன், உப்பு மற்றும் பொரியுடன் சனீஸ்வரருக்கு வாகனமாக கருதப்படும் மண் காகத்தையும் தலையை சுற்றி பீடத்தில் வைத்தனர். அப்போது தங்களது தோஷங்கள் நிவர்த்தி அடைய வழிபாடு செய்தனர்.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com