கூடலூர்: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கடமான்

இறந்து கிடந்தது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் ஆகும் என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
கூடலூர்: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கடமான்
கடமான்
Published on

கூடலூர்,

கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி அருகே பாரதிநகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் ஆண் கடமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

துர்நாற்றம் வீசியது

அந்த மான் சுமார் 2 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக, கடமானின் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக ஓவேலி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் ஆய்வு

தகவல் அறிந்ததும் ஓவேலி வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த கடமானின் உடலை பார்வையிட்டனர். மான் எப்படி இறந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் தீவிர ஆய்வு நடத்தினர். இருப்பினும், அதன் இறப்பிற்கான உண்மை நிலவரம் உடனடியாக தெரியவில்லை.

பொதுமக்கள் சந்தேகம்

இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "கடமான் இறந்து 2 நாட்களுக்கு மேலாக தேயிலை தோட்டத்திலேயே கிடந்துள்ளது. இந்த பகுதியில் நடமாடும் சமூக விரோதிகள் அல்லது வேட்டை கும்பலின் கைவரிசை காரணமாக இந்த மான் உயிரிழந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும்" என்றனர்.

கால்நடை மருத்துவர் பரிசோதனை

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "இறந்து கிடந்தது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் ஆகும். அதன் உடலில் காயங்கள் உள்ளதா, இறப்பிற்கான பின்னணி என்ன என்பது தற்போது தெரியவில்லை. கால்நடை மருத்துவ குழுவினர் நேரில் வந்து உடற்கூராய்வு பரிசோதனை செய்த பிறகே, மான் எப்படி இறந்தது என்ற முழு விவரமும் தெரிய வரும்" என்றனர்.

தேயிலை தோட்டத்தில் கடமான் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com