

சென்னை,
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய மாபெரும் தலைவர், “குமரி தந்தை” மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் பணிவான மரியாதைகளையும் புகழ் வணக்கங்களையும் செலுத்துகிறேன்.
திருவிதாங்கூர் ஆட்சியின் கீழ் இருந்த தமிழர்கள் தங்களது மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளை காக்க போராடிய காலத்தில், அந்தப் போராட்டத்தின் முன்னணி தலைவராக திகழ்ந்தவர் மார்ஷல் நேசமணி. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கனவை நனவாக்குவதற்காக அவர் நடத்திய அரசியல் மற்றும் மக்கள் இயக்கப் போராட்டங்கள் வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றுள்ளன.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அவர், மக்கள் நலனையே தனது அரசியல் வாழ்வின் இலட்சியமாக கொண்டிருந்தார். அவரது துணிச்சல், தியாகம் மற்றும் தொலைநோக்கு பார்வையின் பலனாகவே இன்று கன்னியாகுமரி தமிழ்நாட்டின் பெருமைமிகு மாவட்டமாக திகழ்கிறது.
தமிழர் உரிமை, சமூக நீதி மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அந்த மாமனிதரின் நினைவு என்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும். “குமரி தந்தை” மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு எங்கள் வீர வணக்கங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.