

பெண் பலாத்காரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ராஜேஷ்குமார் (வயது 29), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016-ல் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணுடன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை ராஜேஷ்குமார் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்தார். பின்னர் அந்த பெண், தனது பெற்றோருடன் ராஜேஷ்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திக் கேட்டுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்ததோடு அந்த பெண்ணையும், அவரது பெற்றோரையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். தற்போது அப்பெண்ணுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ்குமார், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.