திருட்டுப் பணத்தில் மனைவி பெயரில் வாங்கிய நிலம் பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
திருட்டுப் பணத்தில் மனைவி பெயரில் வாங்கிய நிலம் பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புறாக்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி புஷ்பம் (38) இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். பின்னர் வந்து பார்க்கும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணை

விசாரணையில் வீட்டில் திருடு போனது தெரிய வந்த நிலையில் உடனே பளுகல் காவல் நிலைய குற்ற எண் 11/2026 U/S 331, 357, 380 IPC r/w 331 (3), 331 (4), 305 (a) BNS பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஐ.பி.எஸ்., உத்தரவுப்படி, மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் பளுகல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

குற்றவாளி

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கேரளம் மாநிலம் காட்டாக்கடை, புலநாடு பகுதியை சேர்ந்த வேணுகோபாலன் என்பவரின் மகன் உன்னி கிருஷ்ணன் (53) என்பது தெரிய வந்தது இதனையடுத்து குற்றவாளியை கைது செய்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் உன்னி கிருஷ்ணன் கொள்ளை அடித்த நகை மற்றும் பணத்தின் மூலமாக கேரளம் மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் அவரது மனைவி பெயரில் சுமார் 8.40 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் நிலம் வாங்கியது தெரியவந்தது.

நிலம் பறிமுதல்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடைய உத்தரவில் இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பளுகல் காவல் நிலைய போலீசார் தகுந்த ஆதாரங்களை குழித்துறை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைத்தனர். அதன்அடிப்படையில் குற்றவாளி திருடிய பணத்தில் தன்னுடைய மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com