வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

குறிப்பாக திருப்பூர், கோவையில் உள்ள பனியன் நிறுவனங்களில் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

போலி வீடியோ

இற்கிடையே தமிழகத்தில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின. குறிப்பாக பீகாரை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது.

இதனால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. பீகார் அரசும், தமிழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அது போலி வீடியோ என்பது தெரியவந்தது. இதனையடுத்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் அறிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாக சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் வடமாநிலத்து பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது.

"வாய் பேச முடியாத தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழ்நாடு தான் காரணம்" என்று அளித்த பேட்டியானது யாராலும் மறக்க முடியாதது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு

தாய்த் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்துக்காக, கல்விக்காக, வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வருவது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழ்நாட்டையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப காலமாக வேலைவாய்ப்புகளை தேடி அனைத்து மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டுக்கு வருவது அதிகரித்து வருகிறது. சேவைத்துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு திகழ்வது தான் இதற்கு காரணம்.

பாதுகாப்பு உறுதி

தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறது.

கொரோனா 2-வது அலையின்போது சொந்த மாநிலங்களுக்கு திரும்பச்செல்ல விரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன.

ரூ.6.27 கோடி விபத்து இழப்பீடு

சென்னை பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இவர்கள் தங்கவைக்கப்பட்டு இருந்த முகாமுக்கு நானே சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டதை உறுதி செய்தேன்.

அதேபோல், ரேஷன் கார்டு இல்லாத, வேலைகளை இழந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு, பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக 1-4-2021 முதல் இதுவரை ரூ.6.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கெட்டப்பெயர் ஏற்படுத்தும் எண்ணம்

கட்டுமான தொழிலில் அவர்கள் பணிபுரியும்போது, பாதுகாப்பாக பணிபுரியவும், விபத்துகளை தவிர்க்கவும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 456 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் 43 ஆயிரம் தொழிலாளர்கள் பயிற்சி பெற்று உள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய வலைத்தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இப்படி வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையை காண பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது.

தமிழ்நாடு வரவேற்பு

இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும், இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கின்றது.

வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டும் என்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும், பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடும் கண்டனம்

இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்கு உரியது.

வடமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் தகவல் தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

அச்சம் வேண்டாம்

இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த 2 தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது. எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூக பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

பீகார் முதல்-மந்திரியுடன் பேச்சு

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்து தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாக சொல்லி இருக்கிறேன். வளமான-அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com