

சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
நீட் தேர்வு எழுதவிருந்த மாணவிகள் அண்மையில் கோவையை சார்ந்த அனு கீர்த்தனா மற்றும் சேலம் மாணவி கோபிகா ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கோவையைச் சார்ந்த மாணவி அனுகீர்த்தனா 'தேர்வு அச்சத்தால்' எழுந்த மன அழுத்தம் காரணமாக உறவினர்களுக்கு 'வாட்ஸ்ஆப்' மூலம் செய்தி அனுப்பிவிட்டு கடந்த ஜூன் 17 அன்று நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரியலூர் மாணவி அனிதா முதல் தற்போது கோபிகா வரை நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் மிகுந்த கவலையளிக்கிறது.
நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் அச்சமடைவதற்கு மருத்துவக் கல்வி தொடர்பாக நாம் உருவாக்கி வைத்திருக்கிற 'பிரமையே' காரணமாகும். மருத்துவம் படித்தால்தான் சமூகத்தில் உயரிய மதிப்பைப் பெற முடியும் என்றும்; அடுத்து பெருமளவில் பொருளாதாரத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும் என்றும் இந்த சமூகம் கட்டமைத்துள்ள ஒரு மாயை தான், மாணவர்களை 'இந்தக் கல்வியைப் பெறமுடியாமல் போனால் எதிர்காலம் என்ன ஆகுமோ' என்கிற அதீத கற்பனைகளுக்கும் அச்சத்திற்கும் இட்டுச் செல்கிறது. எனவே, இத்தகைய மாயையைக்கும் அச்சத்துக்கும் ஆட்படாமல் துணிச்சலோடு எதனையும் எதிர்கொள்ள வேண்டுமென மாணவச் செல்வங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
கடந்த காலங்களிலும் மாநில அரசின் சார்பில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வுகள் நடந்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் இத்தகைய பிரமை மாணவர்களிடையே கட்டமைக்கப்படவில்லை.
இன்றைய சூழலில் இந்திய மத்திய அரசின் தலையீடும் நீட் தேர்வுக்குத் தரப்படும் அதீதமான முக்கியத்துவமும் அதனையொட்டி வணிகப்போட்டிகளைத் தீவிரப்படுத்தும் தனியார் பயிற்சி நிறுவனங்களால் மாணவர்களிடையே உருவாகும் 'தேர்வு அச்சமும்' தான் இவ்வாறான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'நீட் விலக்கு' மசோதாவைக் குடியரசுத் தலைவர் மறுதலித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், நீட் தேர்விலிருந்து முழு விலக்குப் பெறுவதற்கேற்ப தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.