வால்பாறை சாலை தடுப்புச்சுவரில் ஒய்யாரமாக படுத்திருந்த சிறுத்தை: வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், அவசியமற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வனத்துறை ஏச்சரிக்கை.
தடுப்புச்சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை
Published on

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடுப்புச்சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதி, அடர்ந்த காடுகளையும் ஏராளமான வனவிலங்குகளையும் கொண்டது. அங்குள்ள வாட்டர்பால்ஸ் மற்றும் டைகர் பள்ளத்தாக்கு இடையே உள்ள முக்கிய மலைப்பாதையில், பகல் நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையோர தடுப்புச்சுவர் மீது மிகவும் கம்பீரமாகப் படுத்துக் கிடந்துள்ளது.

வீடியோ வைரல்

அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், அந்த அரிய காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொதுமக்களிடையே ஒருபுறம் ஆச்சரியமும், மறுபுறம் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையின் எச்சரிக்கை

மலைப்பாதையில் பயணிக்கும் போது வனவிலங்குகளைக் கண்டால், அவற்றைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வாகனங்களைச் சாலையோரம் நிறுத்தக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும் வகையில் சத்தம் எழுப்பவோ அல்லது அவற்றின் அருகே செல்லவோ கண்டிப்பாக முயற்சி செய்யக்கூடாது.

வால்பாறை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், அவசியமற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சுற்றுலா பயணிகள் வனப்பகுதியின் விதிகளை முறையாகப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com