வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை- பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு

வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வதித்து பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை- பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு
Published on

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அடங்கிய சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது மனைவியுடன் யுவராஜ் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு உறவினர்களுடன் சேர்ந்து யுவராஜை கடந்த 2012-ம் ஆண்டு கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தார்.

இந்த வழக்கில் முருகன், மணி, தங்கராஜ், ராமச்சந்திரன், சண்முகம், ஸ்ரீராமுலு, ராமமூர்த்தி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நடந்து வந்தபோதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்தனர். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நேற்று முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மணி, தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமுலு ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் கே.ஆர்.லாசர் ஆஜரானார். தண்டனை பெற்ற 5 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com