சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி மாற்று சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்ததால், அவரது தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்டார்.
சிறுமியின் தந்தைக்கு ஆயுள் தண்டனை
Published on

தஞ்சாவூர்,

மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

17 வயது சிறுமி காதல்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை அருகே உள்ள நெம்மேலி குடியானத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவருடைய மகள் சோபி(17). இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு சோபியின் தந்தை தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் சோபி தனது முடிவை மாற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜன், கடந்த 26-1-2016 அன்று அம்மாப்பேட்டை அருகே உள்ள சர்க்கரைப்பாளையம் வெண்ணாற்று பகுதியில் சோபியின் கை, கால்களை கட்டி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

ஆணவக்கொலை

இதுகுறித்து அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் காசிநாதன் அளித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ஆணவக்கொலை என வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 12-6-2017 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி தீபா, குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1½ ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வக்கீல் சுகன்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் மற்றும் கோர்ட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் பாராட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com