டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு

கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம நபாகள் திருடிச் சென்றனர்.
டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு
Published on

கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம நபாகள் திருடிச் சென்றனர்.

சுவரில் துளையிட்டு...

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த கடையில் வடபுழுதிவுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர், வழக்கம் போல பணியை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு சென்று உள்ளார். இந்த நிலையில் டாஸ்மாக் கடையின் கட்டிட உரிமையாளர் சுந்தர் கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர், மேற்பார்வையாளர் அண்ணாமலைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் கடையின் சுவரில் துளையிட்டு, உள்ளே புகுந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது..

இந்த சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com