

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை ஆவடியில், மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் அலட்சியத்திற்கு மற்றுமொரு சான்று.
நமது சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி, சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, சுத்தமான, சத்தான உணவை அரசால் வழங்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு. தேர்தல் நேரங்களில் மட்டும் தூய்மைப் பணியாளர்களோடு ஒன்றாக அமர்ந்து, சிரித்து, பேசி, உணவு உண்டு விதவிதமாக வீடியோக்கள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் அரசியல் கட்சிகள், ஆட்சிப் பொறுப்பு கையில் வந்தவுடன் அம்மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டுமென நினைப்பதே இல்லை.
அதிலும், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தூய்மைப் பணியாளர்களை காலணிகளை சுத்தம் செய்ய வைப்பது, எச்சில் இலைகளை அப்புறப்படுத்த வைப்பது என தவெகவினர் செய்யும் அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களை கணிவன்புடன் நடத்துமாறு தனது கட்சியினருக்கு அறிவுறுத்துவதோடு, அவர்களுக்கு தரமான, சுத்தமான உணவு வழங்குவதற்கும் முதல்வர் ஜோசப் விஜய் வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.