

புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி, கேமரா பேனா ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவை செயலகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனா உள்ளிட்ட நவீன சாதனங்கள் பரவலாக கிடைப்பது எம்.பி.க்களுக்கு தெரிந்திருக்கும். இவற்றில் சில சாதனங்கள், எம்.பி.க்களின் தனிநபர் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். நாடாளுமன்ற தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கக்கூடும். ஆதலால் பாதுகாப்பு, தனியுரிமைகளுக்கு எதிராக இருக்கும் இந்த சாதனங்களை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டாம்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, நுழைவு வாயில் கேட்டுகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டாம் என எம்.பி.க்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு போராட்டம் நடத்துவது, நாடாளுமன்ற அலுவலில் பங்கேற்க வரும் மற்ற எம்.பி.க்களின் நடமாட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல், தர்ணா, போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றிலும் எம்.பி.க்கள் ஈடுபட வேண்டாம்.
மேலும், பேனர்கள், கத்திகள், வாள், கம்பு, வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றையும் நாடாளுமன்ற வளாகத்துக்கு எம்.பி.க்கள் எடுத்து வரக்கூடாது என மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.