அன்பால் அறத்தால், கொடையால் ஆசி வழங்கியவர் ஜெயேந்திரர் - விஜயேந்திரர்

அன்பால் அறத்தால், கொடையால் ஆசி வழங்கியவர் ஜெயேந்திரர் என சங்கர மடத்தில் விஜயேந்திரர் பேட்டி அளித்தார். #Kanchishankaracharya #JayendraSaraswathi
அன்பால் அறத்தால், கொடையால் ஆசி வழங்கியவர் ஜெயேந்திரர் - விஜயேந்திரர்
Published on

சென்னை

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் (82) கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார். அந்நிலையில் நேற்று காலை ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அதனையடுத்து, பவுர்ணமி நாளான இன்று, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

இன்று இறுதி சடங்கு நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் அவரது உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், பன்னீர், விபூதி மூலமும் அபிஷேகம் செய்தனர். பின்னர் அவரது உடலுக்கு புது வஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சதானந்தகவுடா, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்செரீப் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன் பிறகு ஜெயேந்திரர் உடலை அடக்கம் செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக சங்கர மடத்தில் உள்ள 68-வது பீடாதிபதி சந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் சமாதியின் இடது புறத்தில் 7 அடி நீளத்தில், 7 அடி அகலத்தில் 9 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.

அந்த குழிக்குள் சந்தன கட்டை, நவரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை போடப்பட்டன. பின்னர் ஜெயேந்திரரின் உடலை மூங்கில் கூடைக்குள் அமர வைத்தனர்.

பின்னர் அவரது உடலை கூடையுடன் குழிக்குள் அமர்ந்த நிலையில் வைத்தனர். அதன் மேலே உப்பு, வசம்பு, மலர்கள் போன்றவை போடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நல்லடக்க நிகழ்ச்சிக்கு பின் சங்கர மடத்தில் விஜயேந்திரர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள நாட்டு மக்களின் நாடித்துடிப்பை ஜெயேந்திரர் நன்கு அறிந்திருந்தார். பேதமின்றி அனைவரையும் ஒருங்கிணத்து அன்பால் அறத்தால், கொடையால் ஆசி வழங்கியவர் ஜெயேந்திரர்.மக்களின் நாடி, நலத்தை அறிந்தவர் ஜெயேந்திரர்; இந்த ஒளி இங்கிருந்து வேறு இடத்திற்கு பயணித்துள்ளது. இறை பக்தியுடன் மக்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். என சங்கர மடத்தில் விஜயேந்திரர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com