

சென்னை,
மதுராந்தகம்-தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு, (35) மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு, கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி அவர்கள் தலைமையிலும்; (101) தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு, கழகப் பொருளாளரும். திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
விரைவில் அறிவிக்கப்பட உள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கழக நிர்வாகிகளும், மதுராந்தகம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி கழக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.