மதுரை ஆதீனம் மறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் மறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

மதுரை,

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக இருந்து வந்தவர், அருணகிரிநாதர். சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இந்த நிலையில் நேற்று இரவில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 77.

சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். தமிழ்த்தொண்டு, ஆன்மீக தொண்டு மற்றும் சமூக பணிகளில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஈடுபட்டு வந்தார். தான் சரி என்று நினைக்ககூடிய அரசியல், சமூக கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com