மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏற்பாடுகள் தீவிரம்

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏற்பாடுகள் தீவிரம்
Published on

மதுரை,

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை திறம்பட கையாள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், விழா நடைபெறும் சமயத்தில் முதல்-அமைச்சர் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே கும்பாபிஷேக விழாவில் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்பதால், முதல்-அமைச்சரின் வருகையால் மேலும் கூட்ட நெரிசல் அதிகரிக்கக் கூடும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் மேலாண்மை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல் துறை, மின்சார வாரியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கும்பாபிஷேக விழாவில் கூட்டத்தை சீரமைக்கும் வகையில் கியூ.ஆர்.(QR) குறியீடுகளைக் கொண்ட ஹாலோகிராபிக் நுழைவுச் சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்றும், இது தொடர்பான முழுமையான அட்டவணை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “தற்காலிகக் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் விரிவான சி.சி.டி.வி. கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறைந்தது 8,000 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்படுகின்றன. முக்கிய வளாகத்திற்குள் நுழைய முடியாத பக்தர்களுக்காக பொது இடங்களில் எல்.இ.டி. (LED) திரைகள் அமைக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com