

சென்னை,
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யாவின் பின்னணி குறித்த தகவல்களை பார்ப்போம்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் பின்னணி குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஐ.பரந்தாமன், பி.ஏ. பி.எல். படித்தவர். கட்சியின் சட்டத்துறை மாநில இணைச் செயலாளராக இருந்து வருகிறார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் தி.மு.க. சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருகிறார். இவர் ஏற்கனவே, கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முந்தைய தேர்தலில் (2016) பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், சுமார் 92 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, எழும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலையீட்டின் காரணமாக இவருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தமிழன் பிரசன்னா களம் இறக்கப்பட்டு, அவர் த.வெ.க. வேட்பாளரும், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகனிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில்தான், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.சுகன்யா, வக்கீலாக பணியாற்றி வருகிறார். கட்சியில் ஒன்றிய அணி செயலாளராக உள்ள இவர், தொகுதியை சேர்ந்தவர். உள்ளூர் அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருபவர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட இவர் விருப்பம் தெரிவித்து இருந்தபோதும் அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.