

சென்னை,
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தி.மு.க., த.வெ.க. வேட்பாளர்கள் ஒரேநாளில் தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது.
இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்க உள்ளது. இடைத்தேர்தல் என்ற போதிலும் கடுமையான போட்டி நிலவுவதால், வெற்றி பெற அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகம் வகுத்து வருகின்றன.
இந்நிலையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க. வேட்பாளர்கள் செப்.15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதன்படி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் செப்.16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.