தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி வழிபாடு
சென்னை,
சிவனுக்குரிய முக்கிய விழாக்களில் மகா சிவராத்திரி முக்கியமானது. அந்த வகையில் மகா சிவராத்திரியையொட்டி சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. காலை முதலே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவில்களுக்கு வெளியே பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் மேற்கொள்வதற்காக தடுப்புகளால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு முதல் அதிகாலை வரை சிவன் கோவில்களில் 6 கால அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.
இரவு முழுவதும் விடிய விடிய 6 கால சிறப்பு அபிஷேகங்கள், ருத்ர பாராயணம், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவனை தரிசிக்கிறார்கள். பக்தர்கள் வழங்கிய பால், தயிர், தேன், நெய், சர்க்கரை, கரும்புச் சாறு, இளநீர், சந்தனம், விபூதி ஆகியவற்றைக் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டன. புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். சிவ பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் சிவப்பெருமானுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
வடபழனி முருகன் கோவில் உள்ள சிவன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

