

சென்னை,
பா.ம.க., சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்த தடை கேட்டு அவரது தந்தை டாக்டர் ராமதாஸ், சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்காததால், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, டாக்டர் ராமதாஸ் வழக்கிற்கு பா.ம.க. பொதுச்செயலாளர் தடை உத்தரவு பெற்றார்.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. "ஐகோர்ட்டு உத்தரவில் தவறு இல்லை. அதேநேரம். மாம்பழம் சின்னம் உரிமை தொடர்பான வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்கும்படி சென்னை உரிமையியல் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், வழக்கை 3 நாட்களுக்குள் விசாரித்து உரிமையியல் கோர்ட்டு தீர்ப்பு அளிக்கவேண்டும்" என்று உத்தரவிட்டது.
இதன்படி, ராமதாஸ் தரப்பில் உரிமையியல் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தர்மபிரபு, இந்த மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்க வேண்டும் என கூறி இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், அன்புமணி பதிலளிக்க உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை இருதரப்பு வாதங்களும் கேட்கப்படும் என்று உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்ம பிரபு தெரிவித்துள்ளார்.