மாணிக்கம் தாகூருக்கு பாஜகவை குறை கூற எந்த தகுதியுமில்லை - நயினார் நாகேந்திரன்

முதலில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, காவிரி நீர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூருக்கு பாஜகவை குறை கூற எந்த தகுதியுமில்லை - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

காலங்காலமாக தமிழர்களுக்கு என்றும் விரோதமாக செயல்படும் உங்கள் கட்சிக்கு, பாஜகவை நோக்கி விரல் நீட்டி குறை கூற எந்த தகுதியுமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

குறுவை சாகுபடி வீழ்ச்சி

தம்பி மாணிக்கம் தாகூரே!.. உங்கள் காங்கிரஸ் தான் கர்நாடகாவை ஆள்கிறது என்ற அடிப்படையை மறந்து விட்டு பேசுகிறீர்கள் போல. அதனால், முதலில் கர்நாடகாவிற்கு சென்று உங்கள் காங்கிரஸ் அரசிடம் பேசி, தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதை விட்டு விட்டு, எங்களை குறை சொல்லி நாட்களை கடத்திக் கொண்டிருக்காதீர்கள்.

CWRC மற்றும் CWMA உள்ளிட்ட ஆணையங்கள் உத்தரவிட்ட பிறகும் கூட, குறித்த நேரத்திற்கு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடாமல் உங்கள் கர்நாடகா காங்கிரஸ் அரசு காட்டிய ஆணவத்தால் தான். தமிழகத்தின் குறுவை சாகுபடி மொத்தமாக வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் நீங்களோ மடைமாற்று அரசியலில் மூழ்கியிருக்கிறீர்கள். அதுமட்டுமன்றி, காவிரி நீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி. சுமூக முடிவை எட்ட வேண்டும் என்று நினைத்த தமிழக முதல்-அமைச்சரையும், வரவிடாமல் தடுத்து அவமானப்படுத்தியது உங்கள் கர்நாடக காங்கிரஸ் தான்.

எந்த தகுதியுமில்லை

அரை நூற்றாண்டிற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் உங்களுக்கு இடம் கொடுத்த ஜோசப் விஜய்யை, கர்நாடக காங்கிரஸ் அரசு இப்படி அவமானப்படுத்தியதற்கு நியாயப்படி நீங்கள் கொந்தளித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், நீங்களோ கட்சியின் விசுவாசியாக கமுக்கமாக இருக்கிறீர்கள்.

எனவே, காவிரி நதிநீர் பங்கீடு, காவிரி நடுவர் மன்றம் அமைப்பதில் தாமதம், காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்தின் நீராதாரத்தை தடுத்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது. கச்சத்தீவை தாரை வார்த்தது. UPA ஆட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அமைதி காத்தது. ஈழத்தமிழர் படுகொலை. காட்சிப்படுத்தக் கூடாத விலங்கினங்கள் பட்டியலில் ஜல்லிக்கட்டு காளைகளை சேர்த்தது என காலங்காலமாக தமிழர்களுக்கு என்றும் விரோதமாக செயல்படும் உங்கள் கட்சிக்கு, பாஜகவை நோக்கி விரல் நீட்டி குறை கூற எந்த தகுதியுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com