எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் சென்னை கல்லூரியை தேர்வு செய்தனர்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் சென்னை கல்லூரியை தேர்வு செய்தனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் சென்னை கல்லூரியை தேர்வு செய்தனர்
Published on

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்தது.

மொத்தம் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட 144 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 123 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 81 மாணவ-மாணவிகளே இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 144 இடங்களில் 46 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2 பி.டி.எஸ். இடங்களையும் மாணவ- மாணவிகள் தேர்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இந்த கலந்தாய்வுக்கு 1,000 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு நடந்த இந்த கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆணையை வழங்கி சிறப்பித்தார்.

நீட் தேர்வில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்த சுருதி என்ற மாணவி, தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்தில் இருந்தார். ஆனால் அவர் அகில இந்திய ஒதுக்கீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை தேர்வு செய்தார்.

பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

1) ஏ.கே.அஸ்வின்ராஜ் (நீட் மதிப்பெண்-677), 2) ஏ.ஸ்ரீகாந்த் (667), 3) ஏ.தான்யா (665), 4) ஷாலினி ஜெயராமன்(655), 5) சி.சவும்யா(655), 6) எம்.சேரலாதன்(654), 7) லிகிதா ரெட்டி(650), 8) ஆர்.சி.கிரிஷன் கார்த்திக்(648), 9) சிபி மிஷல் ராஜா(647), 10) ஜி.சுபஸ்ரீ(647).

முதல் 10 இடங்களை பிடித்த இந்த மாணவ-மாணவிகள் அனைவருமே சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி முடிவில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில் தான். அதேபோல், எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகமாக வைத்து இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்றே சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்களை அதிகரித்து வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்துள்ளோம்.

வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடுமையான விதிமுறைகளின்படி எந்தவித இடர்பாடும் இல்லாமல் நடத்துகிறோம். ஒரு மாணவர் இரு மாநிலங்களில் விண்ணப்பித்தால் தகுதி இழந்துவிடுவார். முறைகேடுகள் நடக்காமல் இருக்கவே ஆன்லைன் கலந்தாய்வு நடத்தாமல், நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

எல்லா மருத்துவ கல்லூரிகளும் சிறந்த கல்லூரிகள் தான். சேவைத்துறையில் நீங்கள் இணைய இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வு வளமாக இருப்பதை காட்டிலும் உங்களால் பல்வேறு தரப்பினரின் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும். டாக்டர் துறைக்கு ஓய்வு என்பது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com