

சென்னை,
சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
இதன் பின்னர் தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்வையிட்டார்.