மதுரவாயலில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

மதுரவாயலில் தனியார் மருத்துவ கல்லூரியின் டீன் மகள் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரவாயலில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
Published on

மதுரவாயல் அடுத்த வானகரம் போரூர் கார்டன் பேஸ் ராமசாமி நகரை சேர்ந்தவர் காசிநாதன் (வயது45). இவர் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் டீனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களது மகள் சைலா (21). இவர் மாங்காட்டில் உள்ள தந்தை பணிபுரியும் அதே மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் சைலா உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்பு அவர் நீண்ட நேரம் ஆகியும் தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் அறைக்குள் சென்று பார்த்தார்.

அப்போது சைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சைலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சைலா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் இதற்கிடையே பெற்றோர்கள் அவரை மருத்துவ படிப்பில் சேர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சைலா மன அழுத்தத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமா? அல்லது வேறு எதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com