மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: மாநில அளவில் திருச்சி 2-வது இடம்

தமிழகத்தில் 3-வதுகட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: மாநில அளவில் திருச்சி 2-வது இடம்
Published on

திருச்சி,

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 3-வதுகட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நேற்று 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி மையங்கள் பலவற்றில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று ஊரக பகுதிகளில் 353 இடங்களிலும், மாநகராட்சி பகுதியான நகர்ப்புற பகுதிகளில் 162 இடங்களிலும் என மொத்தம் 515 இடங்களில் கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

இரவு 7 மணிவரை நடந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 1,06,156 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அளவில் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில், திருச்சி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com