மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பப்படையல் விழா

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பப் படையல் விழா நடைபெற்றது.
மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பப்படையல் விழா
Published on

மேல்மலையனூர், 

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 19-ந் தேதி மயானக் கொள்ளை, 22-ந் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 24-ந் தேதியும், 27-ந்தேதி தெப்பல் உற்சவமும் நடைபெற்றது.

கும்பப்படையல்

விழாவில் கடைசி நாளான நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலையில் அம்மன் மஞ்சள் நீராட்டுடன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இரவு அம்மன் முன்பு கும்பப் படையல் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டவுடன் படையலில் இருந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்பு பூசாரிகள் பம்பை, மேளம் முழங்க கொடிமரத்திற்கு சென்றனர். அங்கு பூஜைகள் செய்யப்பட்டவுடன் கொடி இறக்கப்பட்டவுடன் மாசிப் பெருவிழா நிறைவு பெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com