சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல் நிலை என்ற இலக்கை நோக்கி பயணிப்பதே தமிழக அரசின் குறிக்கோள்

முதல் நிலை என்ற இலக்கை நோக்கி பயணிப்பதே தமிழக அரசின் குறிக்கோள் என்றும் சாம்சங் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல் நிலை என்ற இலக்கை நோக்கி பயணிப்பதே தமிழக அரசின் குறிக்கோள்
Published on

சென்னை,

சாம்சங் நிறுவனத்தின் ரூ.1,588 கோடி முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை ஸ்ரீபெரும்புதூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நமது அரசின் லட்சியத்திற்கு ஏற்ப, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதிலும், பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு வழங்குவதிலும், சாம்சங் நிறுவனத்தின் பங்கு உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, பல தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து, அத்தொழில் நிறுவனங்களை எல்லாம் அவர் துவக்கிவைத்தார். அந்தநிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தற்போது நான் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறேன்.

தலைவர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட இருக்கிறது. தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது எதுவும் சோடை போனது கிடையாது. அதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்ச்சி.

வரைபடத்தையே மாற்றியமைக்கும்

இன்றையதினம், ரூ.1,588 கோடி முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், காற்றழுத்த கருவிகள் உற்பத்தித் திட்டத்தை நிறுவிட முன் வந்துள்ளதை வரவேற்கிறேன். இன்றைய காலகட்டத்தில், மின்னணுவியல்துறை, மாநிலத்தின் உற்பத்தி வரைபடத்தையே மாற்றியமைத்திடக் கூடிய வல்லமை படைத்தது.

இந்திய அளவில் மின்னணுவியல் சார்ந்த உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 20 சதவீதமாக இருக்கிறது. மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும், அந்தத் துறையில் முன்னணி வகிக்க வேண்டும். அதன் பின்பு, முதல் நிலை என்ற அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய குறிக்கோளாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் உங்கள் தயாரிப்பு வரிசையை பல்வகைப்படுத்தி, மேலும் விரிவாக்கம் செய்யுங்கள் என்று சாம்சங் நிர்வாகத்தினை நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டத்தினை நிறுவிட வேண்டும், இந்தத் தருணத்தில், சாம்சங் நிர்வாகத்தினை நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்திட மாநில அரசு தயாராக இருக்கிறது என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் த.ஆனந்த், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசிய தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கென் காங், சாம்சங் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குனர் பியோங் ஜிங் கோன்ங், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சியோங் டியேக் லிம், சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணை மேலாண்மை இயக்குனர் பீட்டர் ரீ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com