ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்

குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கிளறி, அதில் கொட்டப்படும் உணவு கழிவுகளை சாப்பிட்டு விலங்குகள் பழகிவிட்டன.
ஊட்டி அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி - மக்கள் அச்சம்
கரடி
Published on

ஊட்டி,

ஊட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் கரடி ஒன்று ஜாலியாக உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவி வைரலாகி வருகிறது.

வனவிலங்குகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சமீபகாலமாக கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலங்குகள் அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி விட்டது.

பொதுமக்கள் அதிர்ச்சி

இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கோழிப்பண்ணை கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் பிரம்மாண்ட கரடி ஒன்று ஊடுருவியது. தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த கரடி அங்குமிங்கும் உலா வந்துள்ளது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்த பொதுமக்கள், ஊருக்குள் கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

குப்பை தொட்டியில் வேட்டை

வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வரும் கரடிகள், மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றியுள்ள புதர்களிலேயே பதுங்கி கொள்கின்றன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை கிளறி, அதில் கொட்டப்படும் உணவு கழிவுகளை சாப்பிட்டு இவை பழகிவிட்டன.

மக்கள் கோரிக்கை

தற்போது கோழிப்பண்ணை கிராமத்தில் கரடி உலா வந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு, ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com