

சென்னை,
2025-26-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்புக்கான (எஸ்.எஸ்.எல்.சி. ) பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 25 ஆயிரத்து 801 பேரும், சிறைவாசித் தேர்வர்களாக 395 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரத்து 2 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
முதல் பொதுத் தேர்வை எழுதவுள்ளீர்கள். அந்த Excitement இருக்க வேண்டுமே தவிர, பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது. காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். All the Best!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.