பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பணிகளை தொடங்கினார்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்ட ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தனது பணியை தொடங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பணிகளை தொடங்கினார்
Published on

சென்னை,

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கமிஷனர் அனில்மேஷ்ராம் நேற்று சந்தித்து, இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இலாகா மாற்றம் செய்யப்பட்டவுடன் தனது பணியை தொடங்கி உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களின் கல்வியின் தரத்தை தனியார் பள்ளிகளுக்கு மேலாக மேம்படுத்த வேண்டும் என்பதில் தனிகவனமும், அக்கறையும் செலுத்தி இருக்கிறார். இந்த துறையின் கீழ் இயங்கி வரும் 295 பள்ளிக்கூடங்களில் 27 ஆயிரத்து 60 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வேளையும் தரமான உணவு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தங்கும் 1,354 விடுதிகள் உள்ளன. இதில் 87 ஆயிரத்து 416 பேர் தங்கியிருந்து பள்ளி-கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகிறார்கள். இந்த விடுதிகளில் அனைத்து வசதிகளும் முறையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளையும் தரமாகவும், சுகாதாரமான முறையிலும் உணவு வழங்கப்பட வேண்டும்.

விடுதிகளில் நல்ல ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும். எனவே துறையின் அதிகாரிகள் இந்த விடுதிகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசி பார்த்து, அதன் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர், அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறார்.

பழுதடைந்த விடுதிகளை கணக்கெடுத்து பொதுப்பணித்துறை மூலம் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மேற்கொண்டுள்ளார்.

விலையில்லா சைக்கிள்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விலையில்லா சைக்கிள் உள்பட பல்வேறு திட்டப் பணிகளுக்காக 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,154 கோடியே 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் வரும் கல்வி ஆண்டில் 6 லட்சம் 18 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த சைக்கிள் நீண்ட, நெடுங்காலம் பழுதடையாமல் ஓட வேண்டும் என்பதால், சைக்கிள் உதிரிபாகங்கள் தரமாகவும், உறுதியாகவும் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எண்ணத்துக்கு...

பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விலையில்லா இஸ்திரி பெட்டி, தையல் எந்திரம் வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் திட்டங்கள், சலுகைகள் அனைத்தும் முறையான பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைந்து, அவர்கள் பயன் பெற வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் விருப்பம், எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தனது பணியை மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com