ஆர்.எஸ் பாரதியின் கருத்துக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி

பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? என ரமேஷ் கேள்வி எழுப்பினார்.
ஆர்.எஸ் பாரதியின் கருத்துக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி
Published on

சென்னை,

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி பாப்பானுக்கு பதில் சொல்லமாட்டேன் என கூறினார். இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.

சமூக நீதிப் பாதை

உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை. எங்கள் முதல்-அமைச்சர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.

சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது. கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com