கொரோனா நிவாரணத்தொகையாக 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கொரோனா நிவாரணத்தொகையாக 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
கொரோனா நிவாரணத்தொகையாக 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 153 கோடியே 39 லட்சம் செலவில் ரூ.2 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் கையொப்பமிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தலைமைச்செயலகத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத்தொகைக்கான முதல் தவணையான 2 ஆயிரம் ரூபாயை வழங்கிடும் அடையாளமாக, 7 அரிசி குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

15-ந் தேதி முதல் வழங்கப்படும்

இத்தொகை நியாயவிலைக் கடைகள் மூலமாக 15-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வினியோகிக்கப்படும். இதற்கான முன்னேற்பாடாக நேற்று முதல் 12-ந் தேதி (நாளை) வரை 3 நாட்கள் நியாயவிலைக் கடை பணியாளர்களால் வீடுதோறும் சென்று வினியோகிக்கப்படும் டோக்கன்களில், குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com