மான நஷ்டஈடு வழக்கு: மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்- ஐகோர்ட்டு உத்தரவு

கொடுங்கையூரை சேர்ந்த ஜான் பிரிட்டோவிற்கும், தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
மானநஷ்டஈடு வழக்கு: மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்- ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு
Published on

சென்னை,

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜான் பிரிட்டோ என்பவருடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க 21-ந்தேதி வரை அவகாசம்கொடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவதூறு பதிவு

மத்திய அமலாக்கத்துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனாவின் நெருங்கிய உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ரூ.1 கோடி மான நஷ்டஈடு

அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்த கொடுங்கையூரை சேர்ந்த ஜான் பிரிட்டோவிற்கும், தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திட்டவட்டமாக மறுத்தார். பெயர் குழப்பத்தை சாதகமாக்கி கொண்டு, அரசியல் பழிவாங்கும் நோக்குடன் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் இந்த அவதூறு பதிவை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தனது பெயருக்கு ஏற்பட்ட அவதூறுக்காக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரியும், அந்த பதிவுகளை உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிட கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

கோரிக்கை

இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி. வில்சன், நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

உத்தரவு

இந்த அவதூறு வழக்கில் தங்களது தரப்பு விளக்கத்தை விரிவாக தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய 21-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதை எற்றுக்கொண்ட நீதிபதி அவகாசம் வழங்கி விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com