

திருப்பூர்,
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அபி (வயது 60). ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றி வரும் இவர், திமுகவின் தீவிரத் தொண்டர் ஆவார். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
இந்தத் தகவலை அறிந்த அபி, மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். மனமுடைந்த நிலையில் விஜயாபுரம் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்ற அபி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து திடீரென உடைத்துள்ளார். அந்த உடைந்த கண்ணாடித் துண்டால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
அவரது கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டுத் தெறிப்பதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக தலைவரின் தோல்வியால் உணர்ச்சிவசப்பட்ட தொண்டர் ஒருவர் பொது இடத்தில் தற்கொலைக்கு முயன்றது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.