Tamil Nadu Election Results Live : அரியணையில் அமரப்போவது யார்..? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை - தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்...

Tamil Nadu Election Results Live : அரியணையில் அமரப்போவது யார்..? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை - தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்...

234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரம் தெரியவரும்.

பாதுகாப்பு வளையத்தில் த.வெ.க. தலைவர் விஜய் இல்லம்

த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பரபரப்பாகும் சட்டசபை தேர்தல் களம்.. தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

காலை 8 மணிக்கு முன்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். முதல் சுற்று எண்ணிக்கை முடிக்கப்பட்டு முன்னிலை விவரங்கள் 9 மணிக்கு தெரிவிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் வெளியிடப்படும்.

இதேபோல புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்காளத்தில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ண தொடங்கப்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்

சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுதவிர 70 கம்பெனி துணை ராணுவ படையினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இதுதவிர அசம்பாவிதத்தை தவிர்க்க 1 லட்சம் போலீசார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்படும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் 3 முதல் 5 அடுக்கு வரை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தல் முடிவுகள்.. காலை 11 மணிக்கு முன்னிலை நிலவரம்..?

சட்டசபை தேர்தலுக்கான ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் வெளியாக மாலை முதல் நள்ளிரவு வரை ஆகலாம் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான வெற்றிச்சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.

சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் நடக்கிறது. இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு முகவர்கள் முன்னிலையில் வாக்குகளை எண்ணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரம் தெரியவரும்.

விரைவில் முடிவுகள் தெரியும் தொகுதிகள்.. கடைசியாக முடிவுகள் தெரியவரும் தொகுதிகள் எவை, எவை..?

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு தனித்தனியாக மேஜைகள் போடப்பட்டுள்ளன.

இதில் அதிக மேஜை போடப்பட்டுள்ள தொகுதிகள் வருமாறு:-

மாதவரம்-28,

சோழிங்கநல்லூர்-24,

ஆவடி, பூந்தமல்லி, கவுண்டம்பாளையம் தலா 20, மற்ற தொகுதிகளில் 14 மேஜைகள் மட்டும் போடப்பட்டிருக்கும்.

கிணத்துக்கடவு மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தலா 5 வேட்பாளர்கள், ஊட்டி, கூடலூர், குன்னூர், வால்பாறை, மதுரை தெற்கு தலா 6 வேட்பாளர்கள், கீழ்வேளூரில் 7 வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவதால் விரைவில் முடிவுகள் தெரிய வாய்ப்பு உள்ளது.

அதேபோல், சோழிங்கநல்லூர் தொகுதியில் 703 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் முடிவுகள் கடைசியாகத்தான் தெரியவரும்.

பரபரப்பாகும் அரசியல் களம்: தேர்தல் முடிவுகள் எப்போது தெரிய வரும்?

வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைந்தபட்சம் 14 மேஜைகள் முதல் அதிகபட்சமாக 24 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் மேஜைகளை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும். பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில தேர்தல்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன.

எனவே இதுபோன்ற பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறிய தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவு ஓரளவு பிற்பகல் 3 மணியளவில் தெரியவாய்ப்பு உள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை

காலை 8 மணிக்கு முன்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் அனைத்து வேட்பாளா்கள் முன்னிலையில் அகற்றப்படும். இதைத் தொடா்ந்து, காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணியளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும்.

முதல் சுற்று எண்ணிக்கை முடிக்கப்பட்டு முன்னிலை விவரங்கள் 9 மணிக்கு தெரிவிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் வெளியிடப்படும்.

வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் 62 மையங்கள்

தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 4 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 885 பேர் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுதவிர 5 லட்சத்து 80 ஆயிரத்து 384 தபால் வாக்குகளும் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன.

இதற்காக தமிழகம் முழுவதும் 62 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அங்கு குறைந்தபட்சம் 14 மேஜைகள் முதல் அதிகபட்சமாக 24 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் மேஜைகளை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும்.

சட்டசபை தேர்தல் திருவிழா - அரியணையில் அமரப்போவது யார்..?

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின.

இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்ததை காணமுடிந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். பிரசாரம், ரோடு ஷோ என பரபரப்பான காட்சிகளுடன் இந்த தேர்தல் திருவிழா அமைதியாக நடந்து முடிந்தது.

அரியணையில் அமரப்போவது யார்..?

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்ததைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தநிலையில் 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. இதன் முடிவில் யார் அரியணையில் அமரப்போகிறார்கள் என்பது தெரியவரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com